பதிவு செய்த நாள்
22
மே
2015
11:05
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள், கடந்த, 2013 ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. தாயுமான ஸ்வாமி சன்னதி, மட்டுவார் குழுலம்மை சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகள், கோபுரம், மண்டபம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன், ஒரு பகுதியாக உச்சிப்பிள்ளையார் கோவில் விமானத்தில், 5.3 கிலோ எடையுள்ள தங்க தகடுகள் பொருத்தும் பணி, தங்க முலாம் பூசும் பணி ஆகியவை ஜரூராக நடந்து வருகிறது. இப்பணியில், முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் கூறியதாவது: மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில் நடைபெறும் திருப்பணிகளில் முடிந்தவை, எஞ்சியுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் விமானத்துக்கு தங்கத்தகடு பெருத்தும் பணி, ஒரு வாரத்தில் நிறைவடையும். நான்கு மாதத்தில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.