பதிவு செய்த நாள்
23
மே
2015
10:05
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின், ஆறாம் நாளான நேற்று காலை, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரம்மோற்சவம்: ஆர்.கே.பேட்டை சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், உற்சவர் தினசரி சிம்மம், அனுமன், கருடன் என, பல்வேறு வாகனங்களில் வீதியுலா எழுந்தருளி வருகிறார். உற்சவத்தின் ஆறாம் நாளான, நேற்று காலை 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர், வீதியுலா எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிராமணர் வீதி வழியாக புறப்பட்ட தேர், காலை 10:00 மணிக்கு, பஜார் வீதியில் நிலை கொண்டது; பின்னர், மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு, திருத்தணி சாலை, அஞ்சலக வீதி வழியாக, கோவில் வளாகத்தில் நிலைக்கு வந்தது. தேர் திருவிழாவை ஒட்டி, நான்கு மாட வீதிகளில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆர்த்தி எடுத்து வரவேற்பு: தேர் திருவிழாவை காண வந்திருந்த பக்தர்களுக்கு, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரில் வலம் வந்த சுந்தரராஜ பெருமாளை வரவேற்கும் விதமாக, வீதி எங்கும் மா கோலங்கள் போடப்பட்டிருந்தன. வீடுகள் தோறும், உற்சவருக்கு ஆரத்தி எடுத்து, பக்தர்கள் வழிப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இன்று மாலை ஊஞ்சல் சேவையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.