பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
கிருஷ்ணர் கோவில்களில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் துவங்கின. நேற்று காலை, 7:00 மணிக்கு பிரதான ஹோமம், புண்யாக வாசனமும், காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டன.
சிறப்பு அபிஷேகம்: தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட கோவில் விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்து, மூலவருக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, கோலாட்டம், பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்; இரவு, உற்சவம் நடந்தன. இதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தில், பழமையான, நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நான்கு மாதங்களுக்கும் மேலாக திருப்பணி நடைபெற்று வந்தது.
பக்தர்கள் பங்கேற்பு: அனைத்து திருப்பணிகளும் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை மாலை 6:00 மணியளவில், வாஸ்து ஹோமம் உட்பட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மாலை, விமான கலச திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிஅளவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனிதநீர், கோவில் கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சுற்றி உள்ள, பக்தர்கள் கலந்து கொண்டு, நவநீத கிருஷ்ணனின் அருள் பெற்றனர்.