பதிவு செய்த நாள்
23
மே
2015
11:05
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவம், நேற்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியபாளையம் அடுத்த, பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது, கோதண்டராம சுவாமி கோவில். பழமைவாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவ விழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான, நேற்று இரவு 7:00 மணிக்கு, உற்சவர் கோதண்டராம சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் பல்லக்கில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 8:00 மணிக்கு, உற்சவர் அம்ச வாகனத்திலும்; இரவு, 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.