சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கண்நோய் உட்பட சகல நோய் தீர்க்கும் அம்மனாக நாட்டரசன்கோட்டையில் வீற்றிருக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று காலை 11.35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் வைகாசி விழா துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவராக எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின் கொடியேற்றப்பட்டது.நேற்று மாலை வெள்ளி கேடகத்தில் அம்மன் வலம் வந்தார். மாலை 4 மணிக்கு சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6:10 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி புறப்பாடு: 11 நாட்கள் நடக்கும் வைகாசி திருவிழாவில் தினமும் பகலில் அம்மன் வெள்ளி கேடகம், பல்லக்கில் வலம் வருவார். இரவு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், அன்னவாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில் வலம் வருவார். மே 30ம் தேதி இரவு கோயில் உட்பிரகாரத்தில் தங்கரத புறப்பாடு நடக்கும். மே31ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் வலம் வருவார். ஜூன் 1ம் தேதி காலை 9:35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.ஜூன் 3ம் தேதி உற்சவ சாந்தியுடன் நிறைவு பெறும்.