பதிவு செய்த நாள்
25
மே
2015
11:05
உத்திரமேரூர்: திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், கோபுர கலசம் ஒன்று கழன்று விழுந்து உடைந்ததை அடுத்து, மீண்டும் புதிய கலசம் இதுவரை பொருத்தப்படாதது பக்தர்களை அதிருப்தியடைய செய்து உள்ளது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் அமிர்த குஜலாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், தினசரி 2 கால பூஜைகள் நடந்து வரு கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு திருப்புலிவனம் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் உள்ள பக்தர்கள் வந்து வழிபாடு மேற்கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், கோவில் கோபுரத்தின் மீது கலசங்களில் ஒன்று கழன்று கீழே விழுந்து உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், 4 கலசங்கள் மட்டுமே காணப்படுகிறது. ஒரு கலசம் இல்லாமல் கோபுரம் காட்சி அளிப்பதால், கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அதிருப்தியடைந்து செல்கின்றனர். எனவே, திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், சேதமடைந்த கலசத்திற்கு பதிலாக புதிய கலசம் பொருத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘மாற்றுக் கலசம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை பொருத்தி, பரிகார பூஜையும்; சிறிய அளவிலான கும்பாபிஷேகமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நல்ல நாள் பார்த்து விரைவில் நடத்த ப்படும்’ என்றார்.