பதிவு செய்த நாள்
26
மே
2015
11:05
அவிநாசி : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று நடந்த முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலத்தால், திருமுருகன்பூண்டி நேற்று விழாக்கோலம் பூண்டது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், 29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. காவேரி, பிரம்மபுத்திரா, கங்கை, யமுனை, சரஸ்வதி, மானசரோவர் உள்ளிட்ட, 18 புண்ணிய நதிகளில் இருந்தும், பல்வேறு சிவாலயங்களில் இருந்தும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, குடங்களில் நிரப்பப்பட்டு, ஊர்வலம் நடந்தது.அணைப்புதூரில் உள்ள கூப்பிடு விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், திருப்பூர் ரோடு வழியாக 2 கி.மீ., தூரம் சென்று, கோவிலில் நிறைவடைந்தது. நாதஸ்வர இசையுடன் யானை முன்னே அணிவகுக்க, தீபங்களை ஏந்திய பெண்கள் திருவாசகம் பாடி வார, பெண்கள் சிங்காரி மேளத்தை இசைக்க, கோலாட்டம், குதிரையாட்டத்துடன், 308 பெண்கள் தீர்த்தக்குடம், 308 முளைப்பாரி சுமந்த பெண்கள் மற்றும் 18 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்களை சுமந்த சிவனடியார்கள் என, பலரும் பங்கேற்றனர். ஆலகால விஷத்தை அருந்தும் நீலகண்டன், சிவபெருமான் கைலாய காட்சியும், இடம் பெற்றிருந்தன.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, சேக்கிழார் புனிதர் பேரவை, ஸ்ரீசுந்தரர் வழிபாட்டுக்குழு, பிரதோஷ வழிபாட்டுக்குழு, ஸ்ரீருத்ராபிஷேக வழிபாட்டுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், சிவனடி யார்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தீர்த்தக்குட ஊர்வலத்தால், நேற்று மாலை, 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூரை நோக்கி சென்ற வாகனங்கள், அணைப்புதூரை தாண்டி, 3 கி.மீ., தூரத்துக்கும்; அவிநாசி நோக்கி சென்ற வாகனங்கள், அம்மாபாளையம் வரையும் அணிவகுத்து நின்றிருந்தன.