பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
சுபாஷ் கபூர் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்தப்பட்ட, கி.பி., 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் கால முருகன் சிலை, தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சிலை திருடு போனபோது, அதுபற்றி, முதல் தகவல் அறிக்கையை கூட, போலீசார் பதிவு செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் வசித்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், சுபாஷ் கபூர். அவன் மன்ஹாட்டன் நகரில், சோபியா ஸ்டோரேஜ் என்ற பெயரில், பழங்கால கலைப் பொருட்கள் விற்கும், கலைக்கூடம் நடத்தி வந்தான்.
ரூ.645கோடி மதிப்பு: இந்த நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கலைப் பொருட்களை கடத்தியதாக பதிவான குற்றச்சாட்டின் அடிப்படையில், ௨௦௧௧ல், ஜெர்மனியில், இன்டர்போல் போலீசார் உதவியுடன் துசெய்யப்பட்டான்.விசாரணையில், தமிழகத்தின், அரியலுார் மாவட்டத்தின், சிவாலயத்தைச் சேர்ந்த ஐம்பொன் சிலைகளை கடத்தி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம் மற்றும் உலகளவில் கலைப் பொருட்கள் சேகரிக்கும் தனி நபர்களுக்கு, அவன் விற்றதாக தெரிய வந்தது. அதன்பின், தொடர் விசாரணைக்காக, அவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டான். தற்போது, விசாரணை நடந்து வருகிறது.அவன் கைதானதை அடுத்து, அமெரிக்காவில் உள்ள அவனது நிறுவனங்களில் சோதனை நடத்திய போலீசார், அவன் பதுக்கி வைத்திருந்த, 2,622 கடத்தல் கலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் இன்றைய மதிப்பு, 645 கோடி ரூபாய். அவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவைச் சேர்ந்த பொருட்கள். அவற்றில், மூன்று வழக்குகள் தமிழகத்தில் இருந்து அவன் திருடியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அவன் கைவைத்த இடங்கள் அனைத்தும், தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோவில்கள் தான்.
இன்னொரு கண்டுபிடிப்பு: இதற்கிடையே, சிங்கப்பூரில் ஒரு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய்குமார் என்ற வரலாற்று ஆர்வலர், தன், பொயட்ரிஇன்ஸ்டோன் என்ற வலைப்பூவில், சுபாஷ் கபூர் கும்பலால் கடத்தப்பட்டு, வெளிநாடு களில், அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள, சிலைகள் குறித்து, எழுதி வருகிறார். அவரும், அவரது, இந்தியா பிரைட் பிராஜக்ட் டீம் என்ற நண்பர்கள் குழுவும் சேர்ந்து எடுத்த அடுத்தடுத்த முயற்சிகளின் பலனாகவும், தமிழக சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீசாரின் தொடர் முயற்சியாலும், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலின், அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை, ஸ்ரீபுரந்தான் கோவில் நடராஜர் உற்சவர் சிலை ஆகியவை, சமீபத்தில் நாடு திரும்பின. விஜய்குமாரும், அவரது நண்பர், ஜேசன் பெல்க் என்ற அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளரும் இணைந்து நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு சிலை, கபூரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருப்பது தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள, தச்சூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்த முருகன் சிலை தான் அது.
ஆதாரம் நுால் தான்!
தச்சூர் கிராமத்தில், 1998ல் யதேச்சையாக, ஒரு இடத்தில் பூமியை தோண்டிய போது, சில சிலைகள் கிடைத்தன. பல்லவர் காலத்தைச் சேர்ந்த பல சிலைகள், கல்வெட்டுகள் கிடைத்தன. அவற்றில், ஒன்று தான், முருகன் சிலை.கடந்த, 2006, அந்த சிலைகள் குறித்து, பிரெஞ்சு நாட்டினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் எழுதிய குறிப்புகளில், முருகன் சிலை பற்றி எதுவும் இல்லை.இதற்கிடையே, ௨௦௦௦ம் ஆண்டில், தமிழகத்தைச் சேர்ந்த, தொல்லியல் அறிஞர்கள், நடன.காசிநாதன், சுந்தரமூர்த்தி இருவரும் எழுதி,மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட, தடயம் என்ற நுாலில், அந்த முருகன் சிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த நுாலில், பல்லவர் கால முருகன் சிலை பற்றி எழுதப்பட்டிருப்பதாவது:சம அளவில் நேராக நிற்கும் முருகனின் தலையை கண்ணிமாலை யும், கரண்ட மகுடமும் அணி செய்கின்றன. காதுகளில் பத்ம குண்டலங்கள் தொங்குகின்றன. மேலிரு கரங்களில் படைக்கலன்கள் சிதைக்கப்பட்டு விட்டனவாக தெரிகிறது. இக்கைகளில் பல்லவர் மரபில் அக்கமாலையும், கெண்டிகையும் இருந்திருக்கலாம் என, கருத முடிகிறது. இடது மேல் கையின் விரல்கள் பகுதியும், வலக்கீழ்க்கையின் கட்டை விரல் பகுதியும் சிதைக்கப்பட்டு விட்டன. இடக்கீழ்க்கை, கட்டிய வலம்பித முத்திரையில் உள்ளது. மார்பில் புரிநுால் வலக்கீழ்க் கரத்தின் மீதேறிச் செல்கிறது. தோள்களில் பாஜிபந்தமும், முன்னங்கைகளில் காப்புகளும் அணியப் பெற்றிருக்கின்றன. இடுப்பாடை, தொடை வரை காணப் பெறுகிறது. இவ்வாறு, அந்த நுாலில்,76வது பக்கத்தில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நுாலில், தச்சூர் புதையல் - பல்லவர் கால சிற்பங்கள் என்ற தலைப்பில், தச்சூரில் கிடைத்த, கி.பி. 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் பற்றி ஒரு கட்டுரையே இடம் பெற்றுள்ளது. அதில் தான், முருகன் சிலை பற்றிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. கடந்த, 2006ல், பிரெஞ்சு நாட்டினர், தச்சூரை நேரில் கண்டு ஆய்வு செய்தபோது, முருகன் சிலை இல்லை; அதற்கு முன்பும், 2006ம் ஆண்டிற்கு பின்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில், அந்த சிலை, திருடு போயிருக்கிறது தெரிகிறது.ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த சிலை திருட்டு குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. சுபாஷ் கபூர் கும்பலால் கடத்தப்பட்ட முருகன் சிலை, தற்போது அமெரிக்காவில் இருப்பது, வரலாற்று ஆர்வலர் விஜய்குமார் மூலம் தெரியவந்துள்ளது.தச்சூர் சிலை தான், தற்போது அமெரிக்காவில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஆதாரம், தடயம் என்ற நுால் தான். விஜய்குமார் நண்பர்கள் குழுவில் உள்ள, தச்சூரைச் சேர்ந்த, பல் மருத்துவர் அருண்குமார் பங்கஜ் என்பவர், அந்த நுால் பற்றிய விவரங்களை கொடுத்துள்ளார்.
செய்ய வேண்டியது: என்ன?சுபாஷ் கபூரால் கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் தற்போது அமெரிக்க அரசு பல கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க அரசு, சுபாஷ் கபூர் மற்றும் அவனது உறவினர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்குகள் முடியும் வரை, சிலைகள், சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைப்பதில், தாமதம் ஏற்படும்.அதற்குள், அந்த சிலைகளை மீட்டு வர, தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐ.நா.,வின், கலாசார சொத்துகள் பற்றிய, 1970ம் ஆண்டின் தீர்மானத்தின்படி, அந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டவை என்பதை நிரூபிக்க, இங்கு, சிலைகள் கடத்தப்பட்ட இடத்தில், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், தச்சூர் முருகன் சிலைக்கு, முதல் தகவல் அறிக்கை பதிவாகவில்லை என்பது தான், மிகவும் வருந்தத்தக்க செய்தி. இந்த வழக்கில், தமிழக அரசு, உடனடியாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது தான், வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கை.
தகவல் அனுப்பலாம்!
தமிழக கிராமங்கள், ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகள் திருடு போயிருந்தால், அது பற்றிய விவரங்களை, www.poetryinstone.in என்ற வலைதள முகவரி அல்லது twitter@indiaprideproj என்ற டுவிட்டர் முகவரிக்கோ, அனுப்பலாம்.