ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்சவ விழா துவங்கியது. இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் மாலை 6 மணிக்குமேல் மாட வீதிகள் சுற்றி வந்து, நாடகசாலைத் தெருவில் உள்ள திருவேங்கிடமுடையான் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருமேனியில் சந்தனம் பூசியும், ஆண்டாள் தலையில் மல்லிகை பூச்சூடியும் காணப்படுவர். கோடையின் வெம்மை தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை உருவாகி, வசந்த கால சூழ்நிலை உருவாகும் என்பது இதன் ஐதீகம் என பெரியாழ்வார் வழித்தோன்றல் அனந்தராமன் பட்டர் விளக்கமளித்தார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.