பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
மைசூரு: மைசூரு மன்னர் பரம்பரையில், 27வது மன்னராக, யதுவீருக்கு இன்று பட்டம் சூட்டப்படுவதால், ராஜபோஜனா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2013 டிசம்பரில், மைசூரு சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த, ஸ்ரீகண்ட தத்தா நரசிம்மராஜ உடையார் இயற்கை எய்தினார். அன்று முதல் மைசூரு சமஸ்தானத்துக்கு, வாரிசு இல்லாமல் இருந்தது. ஸ்ரீகண்ட தத்தா உடையாருக்கு, இறுதி சடங்கு செய்த, அவரது சகோதரி மகன், சதுரங்க தேவராஜ், அடுத்த வாரிசாக வருவார் என கருதப்பட்டது.
மகாராணி அறிவிப்பு: இந்நிலையில், மைசூரு மகாராணி பிரமோதா தேவி, ஸ்ரீகண்ட தத்தாவின் மற்றொரு சகோதரி மகன் யதுவீர், 23 என்பவரை, வாரிசாக அறிவித்தார். அமெரிக்காவில் பி.ஏ., பொருளாதாரம் படித்த யதுவீர், மைசூருவுக்கு வரவழைக்கப்பட்டு, பட்டம் சூட்டுவதற்கான ஏற்பாடுகளை, கடந்த ஒரு மாதமாக செய்து வந்தனர். இதையடுத்து, 600 ஆண்டுகள் பழமையான உடையார் அரச பரம்பரையில், 27வது மன்னராக, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு, இன்று பட்டம் சூட்டும் விழா, மைசூரு அரண்மனையில் கோலாகலமாக நடக்கிறது. பட்டம் சூட்டும் விழாவை முன்னிட்டு, 52 வகையான பூஜைகள், நேற்றே துவங்கின; 28 பூஜைகள் நடந்து முடிந்துள்ளன.
விசேஷ பூஜைகள்: நேற்று அதிகாலையில், சாஸ்திர முறைப்படி, சுமங்கலி பெண்கள் புடை சூழ, யதுவீர், மகாராணி பிரமோதா தேவிக்கு, பாத பூஜை செய்தார். பின், அரண்மனை வளாகத்திலுள்ள கோடி சோமேஸ்வரா கோவிலுக்கு, குதிரை, ஒட்டகம், யானை, ஆடு ஆகியவைகளுடன், மங்கள வாத்தியங்கள் இசைக்க, மன்னர் குடும்பத்தினர் சென்று, பூஜை செய்தனர். காலை 11:00 மணிக்கு, யது வம்சத்தின் ராஜகுருவான பரகால சுவாமிகள், அரண்மனைக்கு வந்தவுடன், அரச குடும்பத்தினர், பக்தியுடன் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின், திருமண மண்டபத்தில், ராஜகுருவுக்கு யதுவீர், பாதபூஜை செய்தார். இதையடுத்து, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. அரண்மனை பாதுகாப்பு படையுடன், மைசூரு நகர போலீஸ் கமிஷனரும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளார்.
ராஜபோஜனா: இவ்விழாவின் போது பரிமாறப் படும், ராஜபோஜனா மிகவும் விசேஷமானது. மெகா விருந்தை தயாரிக்க, 32 ஆண்டுகளாக, அரச பரம்பரையினர் விசேஷங்களுக்கு சமையல் செய்து பழக்கப்பட்ட, சாமுண்டிபுரத்தில் வசிக்கும் சீனிவாசராவ், 55, என்பவரிடம், விருந்து தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தென் கன்னடா, தென் மாநிலம், ஆந்திரா, தமிழ், சைனீஸ், வட மாநில உணவு தயாரிப்புகளில் திறமை பெற்ற இவர், தன் சகோதரர்கள் இருவர் உட்பட, 100 உடுப்பி பிராமண சமையல்காரர்களுடன், ராஜபோஜனா தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். மேலும், 1,500 அரச குடும்ப உறுப்பினர்கள், விருந்தினர் பங்கேற்கும் இவ்விழாவில், 22 வகையான உணவு அயிட்டங்கள் பரிமாறப்பட உள்ளன.
வனத்துறை மறுப்பு: பட்டம் சூட்டும் விழாவில் பங்கேற்க, பட்டத்து யானையும், தசரா விழாவின் போது தொடர்ந்து பங்கேற்று வந்த, 58 வயதான பலராமை அனுப்பி வைக்கும்படி, மைசூரு அரச குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், 2002ம் ஆண்டு உத்தரவுப்படி, மைசூரு தசரா திருவிழா, சுதந்திர தின விழா, முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் தவிர, பிற தனியார் நிகழ்ச்சிகளுக்கு, யானைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருப்பதால், பலராமை அனுப்புவதற்கில்லை என, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் மதன்கோபால், அரச குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரித்தார்.
இட்லி முதல் ஐஸ்கிரீம் வரை: இன்று காலை, சிற்றுண்டியாக இட்லி, சட்னி, சாம்பார், பொங்கல், சேமியாபாத், பைனாப்பிள் கேசரிபாத், காபி வழங்கப்படும். அரச குடும்பத்தினருக்கான வரவேற்பில், பருப்பு ஒப்பட்டு நெய், மசாலா தோசை, சட்னி, சீரக சாதம், பருப்பு பொரியல், சாம்பார், தயிர் சாதம் ஊறுகாய், பாலக்காடு மெனசு, பக்கோடா, பானிபூரி, மசாலாபூரி, பசுமை சாலட் ஆகியவை வழங்கப்படும். மதியம், மறைந்த ஸ்ரீகண்டதத்த உடையாருக்கு, மிகவும் பிடித்தமான மைசூரு பாகு, புல்கா, பன்னீர் பட்டர் மசாலா, தால் பிரை போன்ற உணவு வகைகளுடன், முதன்முறையாக மூன்று கவுன்டர்களில், பபே முறையில், விருந்து பரிமாறப்பட உள்ளது. இதுதவிர, கிரீன் சலாட், சேமியா பாயாசம், சிறுபருப்பு மாதுளம் பழம் கலந்த கோசம்பரி, வெள்ளரிக் காய் கடலை பருப்பு கலந்த கோசம்பரி, கோவைக்காய் பொரியல், முந்திரி பருப்பு கலந்த சிறப்பு சாலட், உருளைக்கிழங்கு, பட்டாணி, முந்திரி கலந்த வெஜிடபிள் பிரியாணி, மக்காச்சோளம் மன்சூரியன், தயிர் பச்சடி, சாதம், பருப்பு சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய், பாலக்காடு மென்சூ பீடா, ஐஸ்கிரீம் போன்ற அயிட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.