பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
கோபி: நம்பியூர், கோசனம் அருகே செல்லிபாளையம் செல்லாண்டியம்மன் வகையறா கோவிலில், பொங்கல் பானை மீது ஏறி வரும் வினோத வழிபாடு நேற்று நடந்தது. நம்பியூர் யூனியன் கோசனூர் கிராமம் அருகே செல்லிபாளையம் பெரியகாடு, செல்லாண்டியம்மன், அண்ணமார், மாசடச்சி, கன்னிமார், கருப்பராமயன், மகாமுனி கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 25ம் தேதி கொடிவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதலுடன் துவங்கியது. கடந்த, 26ம் தேதி இரவு, 10 மணிக்கு வீட்டு கோவில் படைக்கலம் எடுத்து சுவாமி அழைத்தல், இரவு, 11 மணிக்கு காட்டு கோவிலுக்கு புறப்பட்டு செல்லுதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 5 மணிக்கு நடந்தது. கோவை, சூலூர், பொன்னாச்சிபுதூர், நம்பியூர், செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 750க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் வளாகத்தில் குவிந்தனர். ஏழு படி கொள்ளளவு கொண்ட, 30 பானையில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தலைமை பூசாரி நடராஜ் சுடச்சுட சாதத்தை அள்ளி, பூஜை செய்தார். அதன்பின், பொங்கல் பானை மீது ஏறிவருதல் நடந்தது. அதையடுத்து காலை, 9.30 மணிக்கு, 30 ஆடுகளின் நெஞ்சை பிளந்து, பழத்தை பிசைந்து, பூசாரி உண்ணும் பொழக்கடாய் பூஜை நடந்தது. அதற்கு பின், 11 மணிக்கு மேல் பிற கிடாய்கள் வெட்டப்பட்டன.