பதிவு செய்த நாள்
29
மே
2015
04:05
அவிநாசி: திருப்பூர் அருகே, திருமுருகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்றதும், திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலுமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், 81 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நிறைவு கால யாக பூஜை துவங்கி, 7:30 மணிக்கு நிறைவடைந்தது. காலை, 9:05 மணிக்கு திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர், முயங்குபூண் முலை வல்லியம்மை ஆகிய விமான கோபுரங்களுக்கு புனித நீரால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர்.
"ஓம் நமச்சிவாய, சண்முகநாதருக்கு அரோகரா என, திரண்டிருந்த பக்தர்கள் கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின், மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. மகாபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மங்கல தீபாராதனை நடைபெற்றது.
புக்கொளியூர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, கலெக்டர் கோவிந்தராஜ், மாநகர கமிஷ்னர் சேஷசாயி, திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள், ஸ்ரீசுந்தரர், ஸ்ரீருத்ராபிஷேக, பிரதோஷ வழிபாட்டு குழுவினர், திருப்பூர், கோவை, அவிநாசியை சேர்ந்த தொழிலதிபர்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
யாகசாலை அருகேயும், நலத்தோட்டத்தி<லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 7:30 முதல், 11:00 மணி வரை, திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
போலீசார் கண்காணிப்பு: ஐந்து இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதால், கும்பாபிஷேக நேரத்தில் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
"யாகசாலையில் பூஜிக்கப்பட்ட நாணயம் என யார் விற்றாலும் வாங்காதீர்; அவ்வாறு பூஜை செய்யவில்லை, என, கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்த போதிலும், அன்னதானம் நடக்குமிடத்தில், ஐம்பொன் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
பக்தர்களுக்கு தங்கு தடையின்றி, அன்னதானம் வழங்க, கிழார் புனிதர் பேரவை, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். காலை, 8:00 மணிக்கு துவங்கிய அன்னதானம், மாலை, 3:00 மணிக்கு மேலும் நீடித்தது.