பதிவு செய்த நாள்
30
மே
2015
11:05
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, வரும், ஜூன், 2ம் தேதி தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 23ம் தேதி கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. மறுநாள் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, 27ம் தேதி, ஆதிகேசவபெருமாள் கோவிலில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், ஜூன், 1ம் தேதி காலை, 10 மணிக்கு, மங்கைபாகன் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார்.
பகல், 12.15 மணிக்கு, மகாகணபதி திருத்தேரும், மாலை, 3 மணிக்கு செங்குட்டுவேலவர் திருத்தேரும் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு, 10 மணிக்கு, ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஜூன், 2 ம் தேதி காலை, 8 மணிக்கு, ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். 11 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி திருத்தேர், 3, 4ம் தேதியும் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 5ம் தேதி, வாணவேடிக்கையும், வசந்த உற்சவமும் நடக்கிறது.
6ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், பரிவார மூர்த்திகளுடன், கைலாசநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆடி, மாலை மாற்றி, மலையேறுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.