ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் 46 லட்சத்து 9 ஆயிரத்து 439 ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் அம்மனுக்கு தங்கம், வெள்ளி, பணமாக காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். கோவில் வளாகத்தில் 16 நிரந்தர உண்டியல்களும், தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன.
மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்தமாதத்திற்கான நிகழ்ச்சி கோவில் உதவி ஆணையர் கார்த்திக், கோவை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானாந்தம், பொள்ளாச்சி திருக்கோவில்ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
மொத்தம் உள்ள 16 நிரந்தர உண்டியல்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 893 ரூபாயும், தட்டுக்காணிக்கை உண்டியலில் 12 லட்சத்து 55 ஆயிரத்து 546 ரூபாயும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 190 கிராமும், வெள்ளி 520 கிராமும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது. மாசாணியம்மன் கோவிலில், இந்த மாத உண்டியல் வருமானம் 46 லட்சத்து 9 ஆயிரத்து 439 ரூபாய் ஆகும்.