திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடக்கும் வசந்தோற்சவ விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கடந்த 28ம் தேதி முதல் வசந்தோத்சவ விழா நடக்கிறது. நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு,ஸ்ரீதேவிபூதேவி சமேத தேகளீச பெருமாள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வைபவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அலங்காரம் சாற்று மறை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் முடிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு, பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
வசந்தோற்சவ விழாவை முன்னிட்டு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட, வசந்த மண்டபத்தில் சுவாமி தினசரி எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.