பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
11:06
மதுரை: உலகம் முழுவதும் 21ம் தேதி, சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாரதா வித்யாலயா பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற்றது. இதில் 320 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களைச் செய்தார்கள். இந்த நிகழ்ச்சி சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில், டாக்டர் பெருமாள் (விரிவுரையாளர், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி) முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்: ஒருவர் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உடல் வலிமை-உடல் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். உடல் உறுதி கொண்டவன்- மனஉறுதி- மனவலிமை கொண்டவனாக இருப்பான்- உடல்வலிமை கொண்டவனாக இருப்பான். நல்ல ஆரோக்கியத்திற்கும் தேவையானவை இரண்டு 1. நல்ல உணவு, 2. உடல் பயிற்சி மற்ற செல்வங்கள் பலவற்றைப் பெற்றிருந்தாலும் நோயாளியாக இருப்பவன்- உடல் வலிமையற்றவன் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் துன்பப்படுவான்.
நோயுள்ளவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்பது மட்டுமின்றி, சாதாரண வாழ்க்கை- சராசரி வாழ்க்கையைக் கூட வாழ இயலாமல் அவதிப்படுபவார்கள். அதனால் அவர்களும் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்; தங்களுடன் வாழ்பவர்களும் நரக வாழ்க்கைத் தருகிறார்கள். உபநிஷத சாந்தி மந்திரம் ஒன்று, நாங்கள் உறுதியான அங்கங்கள் உடைய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ளது. குமாரசம்பவத்தில் காளிதாசன், நல்ல ஆரோக்கியத்துடன் உடலை வைத்திருந்தால்தான் உயர்ந்த லட்சியங்களை அடைய முடியும் என்று கூறுகிறார். கடஉபநிஷதம், பலவீனமானவன் ஆத்மாவை அடைய முடியாது என்று கூறுகிறது. உடலை முறையாகப் பேணுவதே ஓர் அறமாகும்; அறவாழ்க்கையாகும். உடல் பலவீனம் அடைந்தால், மனமும் பலவீனம் அடைகிறது.
மதுரை மீனாட்சி கயிலையை நோக்கிச் செல்வதற்கும் முன்பே வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற அனைத்து பயிற்சிகளிலும் வீராங்கனையாக விளங்கினாள். அதனால்தான் அவளால் வழியிலுள்ள அரசர்களையெல்லாம் ஜெயித்து கயிலை செல்ல முடிந்தது. ஸ்ரீரமண மகரிஷி மதுரையில் உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார். அப்போது அவர் விளையாட்டுகளில் வல்லவர். அவர் வைகை நதியில் நீந்தி விளையாடுவார். மேலும் அவர் இரவு நேரங்களில் வைகைக் கரையில் சிலம்பாட்டம், மல்யுத்தம், கபடி விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடுவது வழக்கம். எனவேதான் அவருக்கு இருந்த உடல் வலிமை காரணமாக, திருவண்ணாமலைக்குச் சென்ற ஆரம்ப காலத்தில் அவரால் கடினமான தவங்களை மேற்கொள்ள முடிந்தது.
ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் அரசர்கள். அவர்கள் நல்ல உடல் வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள். கம்சனை வதம் செய்ய மதுரா சென்ற ஸ்ரீகிருஷ்ணன், அங்கு மல்யுத்தம் செய்தார். பீமனும், துரியோதனனும் மல்யுத்தம் பயின்றவர்கள். சுவாமி விவேகானந்தர் மாணவப் பருவத்தில் மல்யுத்தம், குதிரையேற்றம், நீச்சல், சிலம்பாட்டம் உட்பட எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் செய்தவர். அவற்றில் அப்போதே அவர் முதல் மாணவராக இருந்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் துறவியானபிறகும்கூட, தனது வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து வந்தார். சுவாமி விவேகானந்தர், எனது இளம் நண்பர்களே, வலிமை உடையவர்களாக இருங்கள். இதுவே நான் உங்களுக்கு வழங்கும் அறிவுரை. பகவத்கீதை படிப்பதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மன வலிமையும் வாய்ந்தவர்களே நம் நாட்டிற்கு இப்போது தேவை. இந்த அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களையெல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக்கூடிய மனவலிமை; ஆழ்ந்த கடலின் அடித்தளத்திற்குப் போக வேண்டியிருந்தாலும், மரணத்தை நேருக்கு நேரே சந்திக்க வேண்டி வந்தாலும், எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம்- இவையே நமக்கு இப்போது வேண்டும்.
இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிகூடம். இங்கு நாம் நம்மை வலியுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். உன்னை வலிமை வாய்ந்த ஒரு களஞ்சியமாக உருவாக்கிக்கொள் என்று கூறியிருக்கிறார். பாரதியார் தன்னுடைய புதிய ஆத்திசூடியில், உடலினை உறுதி செய் என்று கூறுகிறார். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்கள். அது போல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்போது அதன் அருமை நமக்குத் தெரியாது. பல்வலி வந்தால் பல்லின் அருமை தெரியும். சிறுவயதிலேயே மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படுத்திவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தனது ஒரு பாடலில், நாளும் நடைபழகி வந்தால் காலன் விலகிப் போவானே என்று கூறியிருக்கிறார். நடைபயிற்சி என்பது முதியவர்களுக்குச் சொல்லப்பட்டது. அது மாணவ- மாணவிகளுக்குச் சொல்லப்பட்டது அல்ல. மாணவ- மாணவிகள் நல்ல விளையாட்டுகளிலும், உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சந்நியாசிகள் பலர் மாணவப் பருவத்தில் விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள். இப்போது ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில் உடற்பயிற்சிக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. தங்க ஆபரணம் உள்ள பெட்டியைப் பாதுகாப்பாக வைப்பார்கள். இறைவன் உள்ள இந்த மனித உடலை நாம் முறையாகப் பாதுகாக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தர், இந்திய மக்கள் சரீர பலம் (உடல் வலிமை), புத்தி பலம் (அறிவாற்றல்), ஆத்மபலம் (ஆன்மிக வலிமை) ஆகிய மூன்றையும் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார். பதினெட்டு வயதிற்குள் ஒருவர் உடற்பயிற்சி செய்து எவ்விதம் தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்கிறாரோ- அதுவே வைப்புநிதி போன்று அமைந்து அவரது எலும்பின் வலிமைக்குக் காரணமாகிறது. பதினெட்டு வயதிற்குப் பிறகு தன் உடலை ஒருவர் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து, பதினெட்டு வயதில் நிலைபெற்ற எலும்புகளின் வலிமை அப்படியே நிலைத்திருக்கும். ஐம்பது, ஐம்பத்தைந்து வயதிற்குமேல் சிலர், எனக்கு முதுகுவலி, இடுப்பு வலி என்றெல்லாம் சொல்வதுண்டு. அவர்கள் அப்போது, தங்களின் எலும்புகள் பலவீனம் அடைந்துவிட்டன என்று நினைக்கிறார்கள். உண்மையில் எலும்புகள் அப்போது பலவீனமடையவில்லை. அவர்களுக்கு முதுகுவலி, இடுப்பு வலி ஏற்படுவதற்குக் காரணம்- பதினெட்டு வயதிற்கு முன்னால் அவர்கள் தங்கள் உடலைப் போதிய உடற்பயிற்சி செய்து வைத்துக்கொள்ளவில்லை என்பதுதான். உடற்பயிற்சிகளால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும், மனம் உற்சாகமாக இருக்கும். ஒருவர் மண்ணில் நல்ல வண்ணம் வாழ உடல் வலிமை அவசியம். இவ்வாறு தன் சொற்பொழிவில் கூறினார்.