பதிவு செய்த நாள்
02
ஜூலை
2015
10:07
செங்கல்பட்டு: களிவந்தப்பட்டு கிராமத்தில், நேற்று, கற்கடகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மறைமலை நகர் அடுத்த, களிவந்தப்பட்டு கிராமத்தில் கற்கடநாயகி உடனாய கற்கடகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், பல ஆண்டுகளாக சீரழிந்து இருந்தது. இதையடுத்து, கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, கிரமாவாசிகள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து, இரு ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவக்கப்பட்டன; இப்பணிகள் அனைத்தும், கடந்த மாதம் முடிந்தது. இதையடுத்து, நேற்று, காலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன், கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு, கற்கடகேஸ்வரர், கற்கடநாயகி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காலை 11:00 மணிக்கு, சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவில், களிவந்தப்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.