பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
10:07
ஜம்மு: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, ஆபரேஷன் சிவா என்ற பெயரில், அதிரடி வேட்டையை ராணுவம் துவக்கிஉள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, அமர்நாத் குகை கோவிலில், மே - ஆகஸ்ட் மாதங்களில் பனிக்கட்டியிலான சிவலிங்கம் உருவாவது வழக்கம். இதை தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். அடர்ந்த மலைப் பிரதேசத்தில் இந்த குகை கோவில் இருப்பதால், யாத்திரை செல்வோருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுதல் தொடருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான யாத்திரை நேற்று துவங்கியது. 1,280 பக்தர்கள் அடங்கிய முதல் குழுவினர், ஜம்முவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே, அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் அடங்கிய பயங்கர வாதிகள் குழு, ஏராளமான ஆயுதங்களுடன், பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளதாக உளவு அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆபரேஷன் சிவா என்ற பெயரில், அதிரடி நடவடிக்கையை இந்திய ராணுவம் துவக்கிஉள்ளது. இதன்படி, 7,500 வீரர்கள், யாத்திரை நடக்கும் பாதை முழுவதும் துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் தவிர, மேலும், 10 ஆயிரம் பேர் அடங்கிய பாதுகாப்பு படையினர், பக்தர்கள் மற்றும் கோவில் பாதுகாப்புக்காக பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.