பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
11:07
திருப்புத்தூர்: பட்டமங்கலம் தெட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நாளை யாகவைபவம், மறுநாள் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. சிறப்பு தரிசன வழி அமைக்கப் படாமல் அனைவரும் ஒரே வழியில் சென்ற தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற குருதலம் பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீஅஷ்டமாசித்தி தெட்சிணா மூர்த்தி திருக்கோயில். இக்கோயிலில் மட்டுமே குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.நவக்கிரங்களில் சுபகிரகமான குருபகவான் வாக்கியப் பஞ்சாங்கப் படி ஜூலை 5 ல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.03 மணிக்கு கடக ராசியிலிருந்து புறப்பட்டு சிம்ம ராசியை அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆக்கல், காத்தல், அழித்தல் தெய்வங்கள் ஐக்கியமாக உள்ள இக்கோயிலில் குருப்பெயர்ச்சி யாக வைபவம் செய்வது உத்தமம் என்பதால், குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஜூலை 4ம் தேதியன்று சனிக்கிழமை காலை 10மணி அளவில் குருப்பெயர்ச்சியாக வைபவம் நடைபெறுகிறது. ஓ.சிறுவயல் வெங்கடசுப்பிர மணியம், சிவசங்கர குருக்கள் முன்னின்று நடத்துகின்றனர். காலை 10 மணிக்கு மேல் விக்ன விநாயகர் பூஜையும், பின்னர் குருஹோமமும் நடைபெறும். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடை பெறும். இரவு 10 மணி வரை கோயில் நடை திறக்கப் பட்டிருக்கும். மறுநாள் காலையில் உற்சவம் பக்தர்கள் தரிசனத்திற்கு எழுந்தருளுவார். தொடர்ந்து உற்சவர், மூலவரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசிக்கலாம். பின்னர் குருப்பெயர்ச்சி நடை பெறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 1.03 மணிக்குப் பின்னர் குரு பகவானுக்கும், கோயில் கோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். பரம்பரை அறங்காவலர் ஆர்..வீரப்பச் செட்டியார் கூறுகையில், " இக்கோயிலில் இனிமேல் சிறப்பு தரிசனம் கிடையாது. அனைத்து பக்தர்களும் ஒரே வழியில் சென்று குரு பகவானை தரிசிக்கலாம். குருப்பெயர்ச்சி யாக பைவத்தையும், சிறப்பு தீபாராதனையையும் பக்தர்கள் அனைவரும் சமமாக தரிசிக்கலாம். நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட வரிசையில் வந்து தரிசிக்க வேண்டுகிறோம். சிறப்பு தரிசனத்திற்கான வழி ஏதும் அமைக்கப் படவில்லை, என்றார்.