அழகர்கோவில்: அழகர்கோவிலில் ரூ.90 லட்சம் மதிப்பில் தயாரான புதிய தேர் வெள்ளோட்டத்தில் வடம் பிடிக்க பக்தர்கள் இல்லாததால், மண் அள்ளும் இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டது. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியன்று தேரோட்டம் நடக்கும். இங்குள்ள தேர் 300 ஆண்டுகள் பழமையானது. மலைப்பாதையில் ஆடி, அசைந்து ஓடியதில் வலுவிழந்து தேரில் இருந்த பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. தேரும் ஆட்டம் கண்டது. இதனால் பக்தர்கள் அளித்த ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, நேற்று காலை 9.20 மணிக்கு வெள்ளோட்டம் துவங்கியது. தேரை இழுக்க பக்தர்களை அழைக்கும் வகையில் முன்கூட்டியே பத்திரிக்கை அச்சிட்டோ, செய்தி வெளியிடவோ ÷ காயில் நிர்வாகம் முன்னேற்பாடு செய்யவில்லை. இதனால் தேரை இழுக்க போதுமான பக்தர்கள் வரவில்லை. பள்ளி மாணவர்களை வைத்து இழுக்க வேண்டியிருந்தது. அனுபவமில்லாதவர்கள் தேர் இழுத்ததால், ரோட்டோரம் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களில் சக்கரம் சிக்கியது. இதைதொடர்ந்து தேரை இழுக்க மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு மணி நேரம் தேர் அங்கேயே நின்றது. பலமுறை இழுத்தும் தேர் நகரவில்லை. வேறு வழியின்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டு, ரோட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பகல் 2 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அமைச்சர் செல்லுார் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.