சபரிமலை:ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 22-ம் தேதி நிறைபுத்தரி பூஜை நடப்பதால் ஆறு நாட்கள் நடை திறந்திருக்கும். வரும் 16-ம் தேதி மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் மற்றும் பல்வகை அபிஷேகங்களுக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். 22-ம் தேதி வரை தினமும் வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, களப பூஜை, படி பூஜை, சகஸ்ரகலசம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பொதுவாக மாத பூஜைக்காக ஐந்து முழு நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் நிறைபுத்தரி பூஜை 22-ம் தேதி நடைபெறுவதால் இந்த ஆண்டு ஆடி மாத பூஜைக்காக ஆறு முழுநாட்கள் நடை திறந்திருக்கும். 22-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின் 5.30 முதல் 6.15 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரி பூஜை நடக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
புதிய தந்திரி: அதன் பின் ஆவணி பூஜைக்காக ஆக., 16-ம் தேதி நடை திறக்கும் போது அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கு தந்திரியாக மகேஷ் மோகனரரு பொறுப்பேற்பார். இவர் 2016 ஆடி மாதம் இறுதி வரை தந்திரி பொறுப்பில் இருப்பார். சபரிமலையில் பூஜைகள் பற்றி முடிவு செய்யும் அதிகாரம் செங்கன்னுார் தாழமண் மடம் வசம் உள்ளது. இங்குள்ள தந்திரிகள் ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பூஜைகளை கவனிக்கின்றனர்.