வைகுண்டம் அடையும் உயிர்கள் பெறும் அனுபவம் புதுமையாக இருக்கும். வைகுண்ட எல்லையில் ஓடும் புண்ணிய நதியான விரஜா நதியில் முதலில் உயிர்கள் நீராடி மகிழும். அப்போது, அந்த உயிரின் கர்ம வினைகள் மறையும். இதன்பின் அந்த உயிர் ஒளி பெறும். அங்கிருந்து ஐரம்ம தீபம் என்னும் புண்ணிய குளத்தின் வழியாக சோமச வனத்திலுள்ள அரச மரத்தை அடையும். அங்கு வைகுண்ட வாசிகள் திரண்டு வந்து வரவேற்பு அளிப்பர். அந்த கூட்டத்திலுள்ள தன் ஆச்சாரியாரைக் (குருநாதர்) கண்டு, அந்த உயிர் வணங்கும். பின், அந்த உயிரை தேவமாதர்கள் அழகிய ஆடை, ஆபரணத்தால் அலங்காரம் செய்வர். இன்னிசை முழக்கத்துடன் தேவ விமானத்தில் ஏற்றிச் சென்று, திருமால் பள்ளிகொண்டிருக்கும் திருமாமணி மண்டபத்தை அடைவர். அவருக்கு கைங்கர்யம்(தொண்டு) செய்யும் பாக்கியம் கிடைக்கும்.