பதிவு செய்த நாள்
27
ஜூலை
2015
10:07
சென்னிமலை: சென்னிமலை, மலை மீது அருள்பாலிக்கும் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, 900 குடம் பாலாபிஷேக பெருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திருபுகழை தந்த அருணகிரி நாதருக்கு படிகாசு நல்கிய ஸ்தலமாகும். புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி,போன்ற முனிவர்களுக்கு திருகோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படி வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்பும் கொண்ட மலைக்கோவிலாகும்.இக்கோவிலில், ஆண்டு தோறும் சுப்பிரமணியருக்கு ஆடி விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாலபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, 48வது ஆண்டு பாலாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. 751 குடம் வரும் என எதிர்பார்த்து, ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பால் குடம் எடுப்போர் எண்ணிக்ககை, 900க்கும் அதிகமானது.காலை, ஆறு மணியளவில், 900 திருப்பாற் குடங்கள் உரிய சிறப்புடன், சென்னிமலை நகர் கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளா தாளத்துடன், திருவீதி வலம் வந்து, மலை கோவிலை அடைந்தது.காலை, 11 மணிக்கு, மலை மேல் சுப்பிரமணியருக்கு, பாலாபிஷேகம் துவங்கி, 1.30 மணிக்கு முடிந்தது. சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பாலை, வேத மந்திரங்கள் ஓத, சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள், பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிறப்பு அலங்கார, தீபாராதனையும், மதியம், 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. மதியம் பக்தர்கள் அனைவருக்கும், மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி ,செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன் மற்றும் மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.