பதிவு செய்த நாள்
27
ஜூலை
2015
11:07
ஓசூர்:சூளகிரி அடுத்த, புலியரசி கிராம மக்கள், மழை வேண்டி, கிராமத்தை காலி செய்து, வனப்பகுதியில் குடியேறி சமைத்து சாப்பிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, சூளகிரி சுற்று வட்டார பகுதியில் கடந்த, நான்கு ஆண்டுக்கும் மேலாக பருவழை சரியாக பெய்யாத காரணத்தால், சின்னாறு அணை வரண்டுள்ளது. மேலும், சூளகிரி துறை ஏரி நிரம்பாத காரணத்தால், விவசாய தொழில் பொய்த்தது.இதனால், சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் அவ்வப்போது, மழை வேண்டி நூதன வழிபாடு நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், ஒவ்வொரு கிராமமாக சென்ற இளைஞர்கள், வீடுதோறும் அரிசி, பருப்பு, காய்கறிகளை பெற்று அதை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதேபோல், சூளகிரி அடுத்த புலியரசி கிராமத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டு உபயோக பொருட்கள், கால்நடைகளுடன், கிராமத்தை காலி செய்து, அங்கு பூஜை நடத்தி விட்டு வெளியேறினர். அதன் பின்னர், ஒட்டையனூர் வனப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அங்கேயே குளித்து விட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர், அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். பொதுமக்கள் அனைவரும் புலியரசி கிராமத்தை விட்டு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கிராமத்திற்கு காவல் இருந்தனர்.
இது குறித்து, புலியரசி கிராம மக்கள் கூறியதாவது:கடந்த, 2012ம் ஆண்டு, மழைவேண்டி தங்களது கிராமத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சாமல்பள்ளம் வனப்பகுதியில் குடியேறினோம். இந்த ஆண்டு ஒட்டையனூர் பகுதியில் குடியேறி உள்ளோம். மழை பெய்தால் மட்டுமே சூளகிரி பகுதியில் விவசாயம் சிறப்பாக நடக்கும். விவசாய தொழிலை நம்பி எங்களது கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.வனப்பகுதியில் குடியேறி சிறப்பு பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது எங்களது முன்னோர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாங்களும், வனப்பகுதியில் குடியேறியுள்ளோம். மழை பெய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.