தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில், ஆடித்திருவிழா தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். 183 வது ஆடித்திருவிழா ஜூலை 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும், திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் புஷ்ப, தொட்டில், கருட, ஆஞ்சநேயர், குதிரை, வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடைகள் நடந்தது. அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை நடந்தது. மதியம் 1.15 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளினார். முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பிரமணிய ஆதித்தன் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். பின் அதார பதியை தேர் சுற்றி வந்தது. அப்போது பக்தர்கள் சுருள் வைத்து அய்யா வைகுண்டரை வழிபட்டனர். பின் பக்தர்களுக்கு அன்ன தர்மம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.