பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
11:07
சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடந்தது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை விழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா நேற்று இரவு நடந்தது. குங்குமம், மஞ்சள், சந்தனம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை, தலைமை பூசாரி சிவா மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர், கம்பம் நடப்பட்டு, அந்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், மாரியம்மனுக்கு கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.மேலும், அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், கடை வீதி சின்னமாரியம்மன், உள்ளிட்ட எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் நேற்று கம்பம் நடும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.