பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
11:07
காஞ்சிபுரம்: துார்வாரப்படாமல் இருந்த கோவில் குளத்தை, அப்பகுதிவாசிகள் ஒன்று சேர்ந்து, சுத்தப்படுத்தி துார்வாரும் பணியை செய்தனர்.சின்ன காஞ்சிபுரம் பகுதியில், பழமையான புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. தண்ணீரின்றி வறண்டு காணப்படும் இந்த கோவில் குளத்தில், மண் அதிகமாக தேங்கி இருந்ததால், புற்கள் முளைத்து இருந்தன. குளத்தை அவ்வப்போது, சிவனடியார் பக்தர்கள் குழு சார்பில், சுத்தப்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தில் உள்ள மண் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில், புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த இைளஞர்கள், 25 பேர், குளத்தை சுத்தப்படுத்த முடிவெடுத்தனர். அதன்படி, அவர்கள் ஒன்று சேர்ந்து, குளத்தில் முளைத்திருந்த புற்களை அகற்றி, தேங்கி கிடந்த மண்ணை அள்ளி, வெளியில் கொட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதிவாசிகள் கூறுகையில், இந்த கோவில் குளத்தை துார்வாரி, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; குளத்தில் மண் அதிகம் தேங்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, நான்கு வாரங்களுக்கு, குளத்தில் உள்ள மண்ணை அகற்ற முடிவு செய்து, பணியை துவங்கி உள்ளோம் என்றனர்.