பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
11:07
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, ஞானபுரீயில் ஆஞ்சநேய சுவாமி கோவிலில், பஞ்சதல, 70 அடி உயர விமானம் கட்டுவதற்கான வாஸ்து பூஜை நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில், ஆலங்குடி குரு பகவான் கோவிலில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவில், திருவோணமங்கலத்தில் சங்கடஹர ஸ்ரீமங்களமாருதி கோவில் அமைந்துள்ளது. பிரதான சன்னதியில், 32 அடி உயரத்தில், ஆஞ்சநேயர், வணங்கிய கோலத்தில் அருள் பாலிப்பது சிறப்பாக உள்ளது. இங்கு, விமானம் கட்டுவதற்கான வாஸ்து பூஜை, நேற்று முன்தினம் நடந்தது. கணபதி பூஜை, விமானத்திற்கான வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜை ஆகியவற்றை, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் சொல்லி சிறப்பாக நடத்தினர்.அறங்காவலர் ரமணி அண்ணா முன்னிலையில், சென்னை கனகசபை பிள்ளை, அருணா தம்பதியினர், ரவிக்குமாரன் பிள்ளை, ஞானகுமார் பிள்ளை, ராஜ்குமார் பிள்ளை ஆகியோர், பூஜையை துவக்கி வைத்தனர்.இவர்கள், ஆஞ்சநேயர் சன்னதிக்கான விமானத்திருப்பணிகள் மற்றும் ராமர், லட்சுமணர் கோவில் விமானத்தின் கலசங்களையும், சொந்த செலவில் செய்ய முன்வந்துள்ளனர். வாஸ்து பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.