பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
02:07
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா, சுதர்சன ஹோம பூஜை நேற்று நடந்தது. கோவை மாவட்ட வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு ஏழுநிலை ராஜகோபுரமும், மண்டபங்களும், கோவில் திருப்பணிகளும், மூன்று கோடி ரூபாய் செலவில் நடந்தன. இதன் கும்பாபிஷேகம், ஜூன் 6ல் நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கியது. தினசரி மாலை, 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை மூலவர் அரங்கநாதப்பெருமாளுக்கு சிறப்பு அபிசேகமும், ஆராதனையும், பூஜைகளும் செய்யப்பட்டன. மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, கோவிலில் சக்கரத்தாழ்வார் முன்னிலையில், மகாசுதர்சன ஹோமம் நடந்தது. அர்ச்சகர் ரங்கநாத அய்யங்கார் தலைமையில், ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், கோவில் தலைமை அர்ச்சகர் சுரேஷ் நாராயணன் உள்பட ஏராளமான அர்ச்சகர்கள் பங்கேற்று பூஜை செய்தனர். தக்கார் ஜீவானந்தம், செயல் அலுவலர் நந்தகுமார், மேலாளர் ராமராஜ், மணியம் மகேந்திரன், ஊர்கவுடர் முத்துசாமி, மிராசுதார் ராஜப்பன், திருமுருக பக்தர்கள் குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.