பதிவு செய்த நாள்
31
ஜூலை
2015
10:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று மாலையில் ஆடித்தபசு காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில், சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு விழா பிரசித்திபெற்றது. சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற சர்ச்சையை தீர்க்க கோரி தவமிருந்த கோமதிஅம்பாளுக்கு, சங்கரலிங்கசுவாமி, தனது உடலின் வலதுபகுதியை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
இந்த நிகழ்வுதான் ஆண்டுதோறும் ஆடித்தபசுகாட்சியாக கொண்டாடப்படுகிறது.ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் நாளில் நேற்று காலையில் கும்ப அபிஷேகம், பரிவட்டம் ஆகியன நடந்தன. காலை 11.45 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளினார். மாலை 6 மணியளவில் கோயிலில் இருந்து சங்கரநாராயணசுவாமி எழுந்தருளி, தெற்கு ரதவீதியில் உள்ள தபசு பந்தலுக்கு வந்து சேர்ந்தார். அப்போது மண்டபத்தில் தபசு இருந்த கோமதியம்பிகை தபசு பந்தலுக்கு வந்தார். பின்னர் சுவாமியை மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கும், பக்தர்களுக்கும் சங்கரநாராயணசுவாமி காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் சங்கரா, நாராயணா என்ற கோஷங்களை எழுப்பினர். பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தியான பருத்தி, வத்தல், காய்கறிகளை சுவாமி, அம்பாள் சப்பரங்களின் மீது வீசினர். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தார். இரவு 11 மணிக்கு மேல் சங்கரநாராயணசுவாமி யானை வாகனத்தில் சங்கரலிங்கசுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.