சின்னமனுார் :குச்சனுார் சனீஸ்வரர், நீலாதேவி திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.தேனி மாவட்டம் குச்சனுாரில் சுரபி நதிக்கரையில் உள்ள சுயம்பு மூலவரான சனீஸ்வரரை தரிசித்தால், சனி திசை நடப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். குச்சனுாரில் தற்போது ஆடி சனிவார திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றும், தேரோட்டம் நாளையும் நடக்கிறது.தலைமை அர்ச்சகர் ஜெயபால்முத்து கூறியதாவது: சனீஸ்வரருக்கு தனி சன்னதி குச்சனுாரில் மட்டுமே உள்ளது. இன்று நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பின்பற்றப்படும் அனைத்து ஐதீகங்களும் கடைபிடிக்கப்படும். ஐம்பொன்னால் ஆன உற்சவரை திருமண மேடையில் அமர்த்தி, கும்பத்தை நீலாதேவியாக பாவித்து தாலி கட்டப்படும். சிறப்பு பூஜை செய்யப்பட்ட திருமஞ்சனம் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். திருமண தடை உள்ளவர்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டுபவர்கள் திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும், என்றார்.