பதிவு செய்த நாள்
31
ஜூலை
2015
11:07
இறைவா! அப்துல் கலாமுக்கு, உயர்ந்த சொர்க்கமான, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் வழங்குவாயாக! என, அவரை நல்லடக்கம் செய்து, துஆ (பிரார்த்தனை) கேட்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல், முழு ராணுவ மரியாதையுடன், நேற்று, ராமேஸ்வரத்திலுள்ள பேக்கரும்பு என்ற கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்வதற்கு முன்நடந்த, ஜனாஸா (இறந்தவர்களுக்கான தொழுகை) தொழுகையிலும், அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும், தமிழிலும், அரபியிலும், இஸ்லாமிய முறையில் இமாம்கள் கூடி, துஆ கேட்கப்பட்டது.கலாமுக்காக செய்யப்பட்ட இந்த, துஆ -வில் பங்கேற்ற, மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா கூறியதாவது: அடக்கம் செய்யும்முன் நடந்த தொழுகைக்கு பின்பும், அடக்கம் செய்யப்பட்ட பின்பும், அரபி மற்றும் தமிழ் மொழியில், துஆ கேட்கப்பட்டது.அதில், யா அல்லாஹ்! இந்த உலகிலுள்ள நாங்கள் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் தருவாயாக; நல்லடக்கம் செய்யப்படும் இவருக்கு (கலாமுக்கு), மண்ணறையில் வேதனை ஏற்படாமல், பாதுகாப்பு தந்தருள்வாயாக; அவருக்கு சொர்க்கங்களில் உயர்ந்த வகையான, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த இடத்தை வழங்குவாயாக.
கலாம் கனவு கண்டபடி, உலகில் வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவாயாக; இந்தியாவிலுள்ள வளரும் தலைமுறைகளை, சிறந்த இந்தியர்களாக, அறிவாளிகளாக உருவாக்குவாயாக என, பிரார்த்தனை செய்தோம். கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்து, அவரது உறவினர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்தனர். அதன்படி, அடக்கம் செய்யப்பட்ட இடத்தை, முதற்கட்டமாக சுற்றுச்சுவர் எழுப்பி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள, இரண்டு ஏக்கர் இடத்தில், வழக்கமான மணி மண்டபம் என்று கட்டாமல், கல்வியை உயர்த்த அவர் கனவு கண்டது போல், அங்கு தரம் உயர்த்தப்பட்ட உயர் கல்விக்கான அறிவியல் ஆய்வு மையம் அமைத்து, அதில், வீடியோ கான்பரன்ஸ் வசதி கொண்ட கருத்தரங்கம், டிஜிட்டல் சயின்ஸ் லைப்ரரி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். உயர்கல்வி மையம் அமைக்கும் பணியை தாமதிக்காமல் துவங்க வேண்டும். ராமேஸ்வரத்தில், கலாம் பெயரில் இன்ஜினியரிங் கல்லுாரியும், ராமேஸ்வரத்திலிருந்து டில்லிக்கு, கலாம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயிலும் அறிவிக்க வேண்டும் என்றும் கலாம் உறவினர் மற்றும் நண்பர்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -