பதிவு செய்த நாள்
01
ஆக
2015
11:08
திருத்தணி: குருபவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சாய் பாபா கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குருபவுர்ணமியை முன்னிட்டு, நேற்று திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள, சாய் பாபா கோவில்களில், கணபதி ஹோமம், சத்யநாராயண பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை ஓட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை 5:20 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் மற்றும் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.மதியம் 1:30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு, சந்தியா ஆரத்தியும், உற்சவர் சாய் பாபா திருவீதியுலாவும் நடந்தன. இந்த விழாவில், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.