பதிவு செய்த நாள்
03
ஆக
2015
10:08
இன்று, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, அமராவதி மற்றும் காவிரி கரையோரங்களில், மணல் அள்ளப்படும் இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்படும்.கர்நாடகா நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், மேட்டூர் அணையில் இருந்து, 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து குடிநீருக்காகவும், ஆடிப்பெருக்கை முன்னிட்டும் திறந்து விடப்பட்ட, 6,000 கன அடி நீர் மாயனூர் தடுப்பணை வந்து அதிலிருந்து முக்கொம்பு சென்று, கல்லணை நோக்கி பாய்கிறது. "ஆடிப்பட்டம் தேடி விதை என்று முன்னோர் கூறுவது வழக்கம். இந்தாண்டு அதற்கும் வழியில்லை.ஆடிப்பெருக்கான இன்று, புதுமணத் தம்பதியர் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் மற்றும் மங்கல பொருட்களை ஆற்றில் விட்டு, காவிரித்தாயை வழிபடுவர்.
அதே போல், திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும், என்று வழிபாடு நடத்துவர்.ஆடிப்பெருக்கு அன்று, முளைப்பாரி, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அரிசி, வெல்லம் வைத்து, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து, வாழ்வு சிறக்கவும், தங்களுக்கு கணவனாக அமைந்தவர்கள் நீடூழி வாழவும் வேண்டிக் கொள்வர்.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, வாங்கல், அமராவதியும், காவிரி ஆறும் சங்கமிக்கும் திருமுக்கூடலூர், குளித்தலை ஆகிய காவிரி ஆற்றுப் பகுதிகளிலும், அமராவதி கரையோரத்திலும் ஆடிப்பெருக்கை மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.ஆறுகள் இல்லாத பகுதிகளில் ஓடும் வாய்க்கால்கள், கிணறுகள், அடிபம்புகள் ஆகியவற்றில் மங்களப் பொருட்கள் வைத்து மக்கள் வழிபாடு நடத்துவர்.அமராவதி ஆற்றில், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதால், ஆங்காங்கே படுகுழிகள் அதிகம் உள்ளது.கரூர் மாவட்டத்தில் பல்வேறு மணல்குவாரிகள் அமைந்துள்ளன. இதில், அரசு விதிமுறைக்கு மீறி பல அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர்பள்ளி, மருதூர், கே.பேட்டை, லாலாபேட்டை, சிந்தலவாடி, மாயனூர், நன்னியூர் போன்ற பல்வேறு பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு, பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகிறது.இந்த இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்தும், போலீஸ் பாதுகாப்பு போட்டு மக்களை எச்சரிக்க வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கை.