விருத்தாசலம்: பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் 33ம் ஆண்டு செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தீச்சட்டி, பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் ஊர்வலமாக வந்தனர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, 9:30 மணியளவில், மணிமுக்தாறு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து சுமங்கலி பெண்கள் செவ்வாடை அணிந்து, கஞ்சி க்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடக்கிறது.