பதிவு செய்த நாள்
04
ஆக
2015
11:08
பழநி: ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு பழநி கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்தூர், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்தனர். அருகேயுள்ள சண்முகநதி ஆற்றங்கரையில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை வடிவமைத்து அதற்கு சந்தனம், பொட்டு, மாலை அணிவித்தனர். பச்சரிசியில் சர்க்கரை கலந்து, தேங்காய் பழங்கள், மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் தேங்காயை நார் இல்லாமல் உரித்து தண்ணீரை எடுத்துவிட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள்ளு, நாட்டுசர்க்கரை நிரப்பி மூடினர். அத்தேங்காயை தீயில் சுட்டு எடுத்து அதிலுள்ள பொருட்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். பின் சுவாமிக்கு படைத்த பொருட்களை நதியில் கரைத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, விருப்பாட்சி "தலையூத்து அருவியில் மக்கள் நீராடி மகிழ்ந்தனர். மேற்குமலை தொடர்ச்சியில், ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள விருப்பாட்சி பகுதியில் தலையூத்து அருவி உள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் தலையூத்து அருவியாக மாறி பின்னர் நங்காஞ்சி ஆறாக பாய்கிறது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருக்கை(ஆடி18) முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அருவியில் நீராடிச் செல்வர். கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்ததால் பரப்பலாறு அணை நீரின்றி வறண்டிருந்தது. இதனால் அப்போது இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமின்றி காணப்பட்டது. தற்போது பரப்பலாறு அணையில் நீர் உள்ளதால், வழக்கம் போல் இந்த ஆண்டும் புதுமணத் தம்பதிகள் அருவியில் நீராடி, புத்தாடை அணிந்து மலை அடிவார கோயிலில் வழிபாடு நடத்தினர். இதேபோல் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள குழந்தைவேலப்பர் கோயிலிலும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாட்டம் நடந்தது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, போன்ற பிரசாதங்கள் வழங்கினர். அம்மன் சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் அம்மனை வணங்கினர்.