சிதம்பரம்: ஆடி பெருக்கையொட்டி, சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நடராஜர் கோவில் உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரி நடந்தது. தமிழகத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் நேற்று, சுமங்கலிகள் தங்கள் கணவருடன் சென்று நீராடி மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். மேலும், திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு நடத்தினர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து உலக நன்மை வேண்டி உற்சவ மூர்த்திகள் வீதியுலா சென்று கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.