விருத்தாசலம்: பூதாமூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நிறைவையொட்டி, ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது. விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் 33ம் ஆண்டு செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக கடந்த 31ம் தேதி காலை தீச்சட்டி, பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் ஊர்வலமாக வந்தனர். 1ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில், பெரியார் நகர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமியிடம் அம்மன் பட்டு சீர்வரிசை பெறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, செங்கழனி மாரியம்மன் ராஜ அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.