ராமநாதபுரத்தை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (1711 - 1725), தினமும் ராமேஸ்வரம் சென்று அர்த்த ஜாம பூஜையில், சுவாமியை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக ராமநாதபுரத்திலிருந்து குதிரையில் பாம்பனுக்குச் சென்று, அங்கிருந்து படகில் கடலை கடந்து சென்று தரிசனம் செய்வார். கடலில் சீற்றம், புயல் ஏற்படும் காலங்களில், அவர் கோவிலுக்கு புறப்பட்டு சேர்வதற்குள், பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விடும். இதனால் அவர், பர்வதவர்த்தினி, ராமநாத சுவாமி, விசாலாட்சி, காசி விஸ்வநாதருக்கு சிலைகளை வடித்து ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறத்தில் பிரதிஷ்டை செய்தார். தாமதத்தால் நடை அடைக்கப்பட்டாலும், வெளியே இருந்த சிலைகளை வணங்கி விட்டு திரும்புவார். ராமநாதபுரம் பகுதி சேது நாடு என்றழைக்கப்பட்டதன் நினைவாக, சுவாமிக்கு சேதுபதீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு, சேதுபதீஸ்வரி என்றும் பெயர் சூட்டினார். சுவாமி அருகில், குதிரை மீதமர்ந்த சேதுபதி மன்னரின் வெண்கலச்சிலையும் வைக்கப்பட்டு உள்ளது.