பதிவு செய்த நாள்
04
ஆக
2015
05:08
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே மேட்டு மகாதானபுரம் மஹாலட்சுமி கோவில் விழாவில், ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு மறு நாளான இன்று, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிப்பட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மஹாலட்சுமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். ஆடி, 18க்கு மறுநாள், திருவிழாவின் போது பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது முக்கிய நிகழ்வாக உள்ளது. முன்னதாக, ஆடி மாதம் பிறந்தவுடன், பக்தர்கள் காவிரியில் நீராடி, மஹாலட்சுமி கோவிலுக்குச் சென்று காப்பு மற்றும் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு மறுநாளான இன்று, முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7 மணி முதல் மஹாலட்சுமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 7.45 மணி முதல் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்து கோவில் வளாகத்தில் வரிசையில் உட்கார வைத்தனர். காலை, 9.03 மணிக்கு கருடன் வட்டமிட்டு காட்சியளித்தால், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். காலை, 9.10 மணிக்கு, கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். பின், கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. காலை, 9.15 மணிக்கு சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த, 24 மனை தெலுங்கு செட்டியார், ஏழு பேர், குரும்பக்கவுண்டர் ஏழு பேர் தலையில், முதலில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு, கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்த்திருந்த, 20 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தலையில் பூசாரி பெரியசாமி தேங்காய் உடைத்தார்.