பதிவு செய்த நாள்
05
ஆக
2015
11:08
வடமதுரை : வடமதுரை அருகே கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி பெற்று வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம், ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் 3நாள் திருவிழா துவங்கியது. நேற்றுகாலையில் விரதமிருந்த 20 பெண்கள் உள்பட பக்தர்கள், குளித்து முடித்து கோயில் முன்பாக வட்டமாக அமர்ந்தனர். பூசாரி பழனிச்சாமி தன் பாதத்தில் ஆணிகள் குத்தும்படி வடிவமைக்கப்பட்ட மரக்கட்டை காலணியுடன் பக்தர்களை ஒருமுறை வலம் வந்தார். பின்னர் இரண்டு ஈட்டிகளையும் தனது வயிற்றில் மாறி, மாறி குத்தியபடி வழிபாடு நடத்தினார். வரிசையாக இருந்த பக்தர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ஒவ்வொரு தேங்காய் உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள், சேர்வைக்காரர் தவமணியிடம், சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் "கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷமிட்டனர். வினோத வழிபாட்டை காண ஏராளமான கிராம மக்கள் திரண்டிருந்தனர்.
கம்பிளியம்பட்டி: சாணார்பட்டி அருகே கே.ஆண்டியபட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன், மஹாவிஷ்ணு, வீரபத்திரன் ஆகிய கோயில்களில் ஆடி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் மற்றும் நவமூர்த்திகளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு புராண நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சேர்வை ஆட்டம், அதிர்வேட்டு முழங்க அம்மன் பவனி சென்று தண்ணீர் துறையில் நீராடி சக்தி தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் முன் உள்ள கம்பத்தில் நெய்தீபம் ஏற்றி, பாத குரடு ஏறி, அழகு கட்டரி அம்பு போட்டு, பக்தர்கள் தலையில் சக்தி தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மஞ்சள் நீராடி அம்மன் கரகங்கள் முளைப்பாரியுடன் தண்ணீர் ஸ்தலம் சென்றடைந்தது. பின், கொடியிறக்கம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.