கணவன், எப்பேர்ப்பட்ட உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். இதற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள் திகழ்கிறார். தன் தந்தை பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளை அறிந்து கொண்ட ஆண்டாள், கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும், தன்னை கோபிகைப் பெண்ணாகவும் உருவகப்படுத்திக் கொண்டு, பாசுரம் பாடினாள். பெருமாளும் அவளை திருமணம் செய்து கொண்டார். ஆண்டாள் விரும்பியது கண்ணனைத் தானே! எனவே, மனைவியின் விருப்பம் நிறைவேற பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக அருள்புரிந்தார். இங்கு ரங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மணியாகவும், கருடாழ்வார் பாமாவாகவும் அருள்வதாக ஐதீகம்.