கன்னிப்பெண்கள், தங்கள் மனதில் கற்பனை செய்துள்ள மணாளனை கைப்பிடிக்க ஆண்டாளை மனதில் நினைத்து பாட வேண்டிய வாரணமாயிரம் பாடல் இது. ஆடியில் பாடுங்கள்...ஆவணியில் மாலை சூடுங்கள். அறிவார்ந்த குழந்தைகளைப் பெற வளைகாப்பின் போதும் இதைப் பாடலாம்.
வாரணமாயிரம் சூழவலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுõத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்.
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து காய்சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்.
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மணநீர் அங்கவனோடும் உடன் சென்றங்கு ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.