பதிவு செய்த நாள்
26
ஆக
2015
11:08
சென்னை: புராதன சின்னங்களை புனரமைக்க, மத்திய அரசு அறிவித்துள்ள, ஆதர்ஷ் ஸ்மார்க் திட்டத்தில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சேர்க்கப்பட்டுள்ளது. புராதன சின்னங்கள்:மத்திய கலாசார துறையின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, நாடு முழுவதும் உள்ள, 3,680 புராதன சின்னங்களை பாதுகாக்கிறது; அவ்வப்போது அவற்றை புனரமைக்கிறது. சுற்றுலா பயணிகள், புராதன சின்னங்களை பார்வையிடவும், அவை குறித்த தகவல்களை அறியவும், பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், புராதன சின்னங்களை புனரமைக்க, ஆதர்ஷ் ஸ்மார்க் என்ற திட்டத்தை, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதில், முதல் கட்டமாக, தாஜ்மகால், டில்லி செங்கோட்டை, ஹுமாயூன் கல்லறை உட்பட, 25 புராதன சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் போன்றவை, இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் லுார்துசாமி கூறியதாவது:ஆதர்ஷ் ஸ்மார்க் எனப்படும், மாதிரி நினைவுச் சின்னம் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 25 புராதன சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தின் இரண்டு கோவில்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டப்படி, கோவிலின் வரைபடம், தற்போதைய நிலையில் தயாரிக்கப்பட்டு, சிதைவுள்ள பகுதிகளை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கோவிலின் பாரம்பரியம் குறித்த தகவல் பலகை, சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்வையிடுவதற்கான வசதி, சுற்றி வருவதற்கான நடைபாதை, வை - பை வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, கோவில் குறித்த ஐந்து நிமிட ஒளிப்பட காட்சி, சிறிய நவீன உணவகம் போன்றவையும் அமைக்கப்படும். தொல்லியல் துறை:தற்போது, கோவில்களின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, தொல்லியல் துறை தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் பணி துவக்கப்படும். மாமல்லபுரம் கடற்கரை கோவிலில், கடல் காற்று, கடல் மண் படிவதால் அரிப்பு ஏற்பட்டு, சிற்பங்களில் சிதைவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க, இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.