பதிவு செய்த நாள்
26
ஆக
2015
11:08
சிதம்பரம்: பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று காலை, 10:30 மணிக்கு, கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்கு வந்த அமித் ஷாவை, தமிழக பா.ஜ., செயலர் ஆதவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். பின், பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலுக்குச் சென்று, அமித் ஷா, சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் தலைமையில், பொது தீட்சிதர்கள், பூர்ண கும்ப மரியாதையுடன், அமித் ஷாவை வரவேற்றனர். நடராஜர் சன்னிதியில், கனகசபை பஞ்சாட்சர படியில் நின்று, அமித் ஷா, சுவாமி தரிசனம் செய்தார். அமித் ஷாவுடன், அகில இந்திய பா.ஜ., பொதுச்செயலர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வந்தனர்.
அமித் ஷா வருகையையொட்டி, காலை, 10:00 மணி முதல், வெளியூர் பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் கடும் அவதிபட்டனர். போலீஸ் உத்தரவுப்படி, நான்கு சன்னிதி வீதிகளிலும், 12:00 மணி வரை, கடைகள் மூடப்பட்டன. எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார் மாயமானதால் பரபரப்பு அமித் ஷா, நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து, அருகில் உள்ள நந்தனார் மடத்திற்கு காரில் புறப்பட்டார். கார், வடக்கு மெயின்சாலையை கடந்து, கடலுார் நோக்கிச் சென்றது. இதை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பின், அமித் ஷா, அவர் தங்கிஇருந்த ஓட்டலுக்கும் செல்லவில்லை; நந்தனார் மடத்திற்கும் செல்லவில்லை என அறிந்ததும், போலீசார் அதிர்ச்சிஅடைந்து, அமித் ஷா காரை தேடத் துவங்கினர்.
இதற்கிடையே, அமித் ஷா சென்ற கார், வண்டிகேட் நோக்கிச் சென்றது. கடலுார் பை-பாஸ் சாலையில், பொதுச் செயலர் முரளிதரராவ், முந்திச்சென்று, அமித் ஷாவிடம், நந்தனார் மடத்திற்குச் செல்ல, ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.அதன்பின், காரை திருப்பி, மணலுார் வழியாக, பை-பாஸ் சாலையை அடைந்து, நந்தனார் மடத்திற்கு சென்றனர். இந்த குளறுபடிக்கு காரணம், அமித் ஷா காருக்கு முன்னால் சென்ற பைலட் கார் டிரைவருக்கு, நந்தனார் மடத்திற்குச் செல்லும் வழி தெரியாமல், நேராக கடலுார் நோக்கிச் சென்றது தெரியவந்தது.