பதிவு செய்த நாள்
29
ஆக
2015
11:08
மடத்துக்குளம் அருகே கடத்துார் கோமதியம்மன் உடனமர் அரச்சுனேஸ்வரர் கோவில், தென் திருமணஞ்சேரி என்ற சிறப்புடன் பலநுாறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக விளங்குகிறது. சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில், பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டன. தங்கள் எல்லைகளை வரையறை செய்யவும், பரிகாரங்களுக்காகவும் அமைக்கப்பட்ட இந்த கோவில்கள், பல நுாற்றாண்டுகளை கடந்தும், பல சிறப்புகளை தங்களுக்குள் வைத்து அமைதியாகவும், கம்பீரமாகவும் இன்றும் உள்ளன.
இதில் முக்கியமாக குறிப்பிடப்படுவது கடத்துாரில் கோமதியம்மன் உடனமர்ந்த அர்ச்சுனேஸ்வரர் கோவிலாகும். மருதமரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டதால், மருதுடையார் கோவில் எனவும் குறிப்பிடப்படுகிறது. 12ம் நுாற்றாண்டின் இறுதியிலும், 13ம் நுாற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் (கி.பி.,1273-1305 ) இந்தப்பகுதியை ஆட்சி செய்த மூன்றாம் விக்கிரம சோழமன்னன், தனக்கு ஏற்பட்ட கடுமையான நோயை தீர்த்துவைக்க (பிரமேகம் என்ற சர்க்கரை நோய்) இறைவனை வேண்டியதாகவும், வேண்டுதலுக்குப்பின், இறைவன் அருளால் நோய் நீங்கியதால், இதற்கு பரிகாரமாக இந்தக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியதாக கோவில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த கல்வெட்டுக்களை படியெடுத்த தகவல்கள் இந்து அற நிலையத்துறையினரால் கோவில் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளன). இதற்கு முன் (கி.பி.,1207-1256) ஆண்டுகளில் ஆட்சி செய்த, வீர ராஜேந்திரசோழன் தான் வெற்றி பெற்ற ஒருபகுதியான, ரட்டையம்பாடியை இறையிலி (வரி விதிக்காத கோவில் நிலம்) நிலமாக அறிவித்து அதில் வந்த வருமானத்தின் ஒரு பகுதியை, கடத்துார் மருதுடையார் கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
வரலாற்று நிகழ்வுகளில் முக்கிய பங்கு பெற்று, இதுபோல் அமைக்கப்பட்ட கோவில்களில் ஒவ்வொன்றுக்கும், ஒரு சிறப்பை உருவாக்கி வைப்பது முன்னோர்கள் வழக்கம். சில கோவில்களில் இந்த சிறப்புகள் அனைவராலும் அறியப்படும். சிலவற்றில் தலைமுறை இடைவெளி காரணங்களால் கோவிலின் சிறப்புகள் குறித்த தகவல்கள் மறைந்து போயிருக்கும். இந்த மருதுடையார் கோவிலின் சிறப்பு, கருவறைக்குள் சூரிய ஒளி முழுமையாக விழுவது தான். ஆம்... சூரியன் உதயமாகி வரும்போது, கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுநீரில், தண்ணீரில் பிரதிபலிக்கும் வெளிச்சம், 500 அடிக்கும் அதிக தொலைவிலுள்ள கோவிலின் கருவறைக்குள்ளும், அங்குள்ள சிவலிங்கத்தின் மீதும் துல்லியாக விழுகிறது. ொழில்நுட்பங்கள் வளராத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய உதயத்தையும், ஒளி செல்லும் திசையையும் கணித்து, கருவறைக்குள் சூரிய வெளிச்சம் விழும் வகையில் கட்டடப்பட்டுள்ள இந்த கோவில், முன்னோர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது.