பழநி: மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக விழாநடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன் மண்டபத்தில் சிறப்பு யாகசாலை அமைத்து, புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்கள், 108 சங்குகள் வைத்து, கணபதிஹோமம், சுப்ரமணியர் ஹோமத்துடன் சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜையில் புனித கலசநீர் குழந்தைவேலாயுதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஓணம்பண்டிகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.