பதிவு செய்த நாள்
29
ஆக
2015
02:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப்., 2 ல் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்., 11 ல் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது. முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணித்திருவிழா 12 நாட்கள் நடக்கும். இந்தாண்டு ஆவணித்திருவிழா செப்., 2 ல் காலை 5 முதல் 5.30 க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, வீதியுலா நடக்கவுள்ளது. திருவிழா நாட்களில் தினமும், காலை, மாலை பல்வேறு வாகனங்களில், பல்வேறு கோலங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். செப்., 11 ல் காலை 6 முதல் 6.30 க்குள் சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடிக்கின்றனர். செப்., 13 ல் மாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் மஞ்சள் நீராட்டு விழா கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் உள்ள அரங்கில் திருவிழா நாட்களில் தினமும், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டி மன்றம், பரதநாட்டியம் போன்ற நிழகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், ஆகியோர் செய்து வருகின்றனர்.