பெரியவர்களின் பெயருடன் திரு திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்று சேர்த்து சொல்வர். இதற்கான காரணம் தெரிந்தால் அதன் அருமை புரியும். செல்வத்திற்கு அதிபதி திருமகளாகிய லட்சுமி. இவளை ஸ்ரீதேவி என்றும் குறிப்பிடுவர். நாராயணரின் மார்பில் லட்சுமி நித்ய வாசம் செய்வதால் அவருக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். மாலவனோடு லட்சுமி இணை பிரியாமல் எப்போதும் இருக்கிறாள் என்பதால், திரு.. மால் என்று பெயர். பெரியவர்களைக் குறிப்பிடும் போது, மரியாதை கருதி மட்டும் திரு சேர்ப்பதில்லை. திருமகளின் அருளும், பொருளும் அவர்களைச் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அடைமொழியைச் சேர்க்கிறோம்.