பதிவு செய்த நாள்
01
செப்
2015
11:09
பாங்காக்: தாய்லாந்தில், உலகப்புகழ் பெற்ற பிரம்மா கோவிலில், 20 உயிர்களை பலிவாங்கிய, பயங்கர குண்டு வெடிப்புச் சமபவம் தொடர்பாக, மேலும் இருவருக்கு எதிராக கைது, ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தாய்லாந்தில், ஆக., 17ல், சாதோர்ன் பியர் நகரில், உலக புகழ் பெற்ற, பிரம்மா கோவிலில் பயங்கர குண்டு வெடித்தது; இதில், 20 பேர் பலியாயினர்; ஏராளமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை, ஒரு வெளிநாட்டவரை, தாய்லாந்து போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில், ஏற்கனவே இருவருக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பித்துள்ள போலீசார், நேற்று மேலும், இருவருக்கு எதிராக, இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர். இதுகுறித்து, காவல் துறை செய்தித் தொடர்பாளர் பிரவுத் தவோர்ன்ஸ்ரீ, பாங்காக்கில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போது, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களில் ஒருவர், வான்னா சான்சான்ட் என்ற பெண், 26. பாங்காக் நகரில், இப்பெண் தங்கியிருந்த குடியிருப்பில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களை கைப்பற்றி உள்ளனர். கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு நபரின், நாடு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவ்விருவரின் உருவ வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.